Pages

Monday, May 24, 2010

சதுரக் கள்ளி

எனக்குப் பிடித்தகதைகள் 3
சதுரக் கள்ளி –
தேவகாந்தன்
அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இருந்தது. கனடாவில் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன் பிரச்சினைகள் இருந்தன. இருந்தும் மீண்டும் மீண்டுமாய் அவனுக்கு அந்த முட்செடியின் நினைவுதான் ஏனோ எழுந்துகொண்டிருந்தது. போன கிழமையில் ஒருநாள் உயர்ந்து வளரும் அந்த முட்செடியின் மேல்பாகம் வேலிக்கு மேலால் வளர்ந்து நின்றுகொண்டிருப்பதான கனவு தோற்றமாகியிருந்தது. பற்கள்போன்ற முட்கள் தெரியும்படியான ஒரு அசுரச் சிரிப்போடு அவனை நோக்கி அது தலையசைப்பதுபோன்ற காட்சி. எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனைத் திடுக்கிட்டு எழும்பவைக்கிற காட்சியாகவிருந்தது அது. அவன் அலறிக்கொண்டும் எழுந்திருக்கலாம். ஏன் ஏதாவது கெட்ட கனவு கண்டீர்களா? என்று காலையில் அவனது மனைவிகூடக் கேட்டாளே. அதுவும் ஒரேநாள்தான். கனவா, நினைவின் தடம் புரள்வா என்றுகூட அதுபற்றி இன்னும் தெளிவிருக்கவில்லை அவனுக்கு. அந்தக் கனவின் பின்தான் அந்த நிலைமை ஏற்பட்டதோ? இருக்கலாம். அது அவனது நினைவுகளின் முக்கியமான கூறினைக் கொண்டிருந்த இடமாயே இருந்ததை அவன் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் தன் வீடு சென்றிருந்தபோதே உணர்ந்திருந்தான். வாழ்வை வழி நடத்தும் மூலாதார உணர்வுகளுக்குக் காரணமான சில சம்பவங்கள், பெரும்பாலும் மேலெழுந்தவாரியான நினைவுகளில் படாமலே இருந்துவிடுவதை அனுபவம் அவனுக்கு காட்டிக்கொடுத்திருக்கிறது. அந்தப் பயணம் அவனுக்கு அதிமுக்கியமான ஒன்று. வழி தெரியாதிருந்தது. திசைமூலம் மட்டுமே அன்று தன் வீட்டை அவன் அடையாளம் கண்டு சென்றடைய முடிந்திருந்தான்.
அவனது ஊரிலே ஒரு வயல் இருந்தது. அதன் மத்தியில் ஒரு தாமரைக் குளம். குளத்தோரத்தில் மருதமரம் ஒன்று. சூழலில் பசுமை கொஞ்சம் குறைந்த மாதிரித் தென்பட்டதே தவிர, அந்த அடையாளத்தில் மாற்றமெதுவும் பெரிதாக நிகழ்ந்திருக்கவில்லை. அதன் முன்னால் பிரதான சாலையிலிருந்து குத்திட்டாய்ப் பிரிந்து ஒரு தார் றோட்டு சென்றிருக்கும். நண்பனிடம் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு அந்த இடத்தை ஒரு மாலையில் வந்தடைந்த விவேகானந்தன், திகைத்துப் போனான். அந்த வயற் குளத்திற்கு முன்னால் இருந்திருக்கக் கூடிய தார் றோட்டுக்கு என்னானது? அது இருந்த இடத்தில் ஒரு வெண்கோடு மட்டுமே ஓடியிருந்தது. இரண்டு பக்கங்களிலும் ஆளுயரத்திற்கு வானஞ்சம்பும், ஒட்டொட்டியும். கண்டதோ கேட்டதோ இல்லை, புல் பூண்டுகள் எந்த ஊரிலும் அந்தளவு உயரத்துக்கும், அந்தளவு செழிப்போடும் முளைக்கக்கூடுமென்பதை. அந்த வழிதான் முன்பு இருந்த தார் றோட்டின் எச்சமென்பதை, ஓரத்தில் மின்சாரமும், அதைத் தாங்கி வந்திருந்த எஃகு கம்பிகளும் அற்று நின்றிருந்த பழைய மின்சாரத் தூண் உறுதிப்படுத்த அவன் மேலே சென்றான்.
பிரதான சாலையிலிருந்து சற்றொப்ப இரு நூறு யார் தூரத்தில் அவனது வீடு முன்பு இருந்தது. அப்போது இருநூறு யாருக்கு மேலே வந்திருந்தும் அவனுக்கு தனது வீடு தென்படவில்லை. எங்கே அவனது வீடு என்று யாரையாவது விசாரிக்கலாமெனில் யார் கண்ணில் தட்டுப்பட்டார்கள்? எங்கோ தொலைவில் யாரோ கதைத்துக் கேட்டது. எங்கோ தொலைவில் ஒரு வயற் குருவி கத்திக்கொண்டு ஓடியது. அவ்வளவுதான் அந்த ஊர் கொண்டிருந்த வாழ்வியக்கத்தின் சத்தங்கள்.
விவேகானந்தன் மேலும் மனத்தில் அதிர்வுகொள்ள, சற்றுப் பின்னால் அறிகையானான் தான் அப்0போது நின்றுகொண்டிருந்த இடத்துக்கு முன்னாலேதான் இருக்கிறது தன் நிலமும், வீடும் என்பதை.
விவேகானந்தன் இன்னும் எச்சமாய் நின்றிருந்த வேலி மரத்தில் சைக்கிளைச் சரித்துவிட்டு உள்ளே சென்றான். படி, விறாந்தை, விறாந்தையோடிருந்த காம்பறா, பெரிய அறை, சின்ன அறை, சமையலறையெல்லாம் அந்நந்த இடத்தில் அந்தந்தப்படியேதான் இருந்தன. ஆனால் சீமெந்து, கல் தவிர வேறு எதுவும் இல்லாததாய் ஒரு செட்டை உரித்த கோழிமாதிரி நின்றுகொண்டிருந்தது வீடு. நிலைகள், ஜன்னல்களெல்;லாம் மிக்க அழகாகப் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தன. மிக நிதானமாகச் செய்யப்பட்ட வேலை. மிகுந்த கைத்தேர்ச்சி பாவிக்கப்பட்டிருந்தது. ஒரு நிலை அல்லது ஜன்னல பெயர்க்கப்பட்ட இடத்தில் அதே உயரம் அகலமான நிலையையோ ஜன்னலையோ வைத்து சிறிது சாந்து குழைத்து அப்பிவிட்டால் அப்படியே பொருந்திப்போகிற மாதிரியான பெயர்ப்புக்கள். அந்தளவு கைத்தேர்ச்சியடைய அந்தக் கைகள் எத்தனை பெயர்ப்புக்களை அதுபோல் செய்திருக்கவேண்டும்! விவேகானந்தன் கண்களில் நீர் தளும்ப எண்ணி வியந்தான்.
வானம் மெல்லிய வெளிச்சம் காட்டி மேலே விரிந்து கிடந்தது. முன்பெல்லாம் அவ்வாறு தெரிந்து விடாது. மாமரங்கள், பலாக்கள், வேம்புகள், மஞ்ஞவுண்ணாக்கள் என சோலைபத்திக் கிடந்த வளவு அது. இருள்வது பிரக்ஞையாகாமல் விறாந்தையிலேறி விவேகானந்தன் சின்ன அறைப் பக்கம் வந்தான்.
அதுதான் சின்ன வயதில் அவனுடைய அறையாக இருந்தது. தெற்குப் பக்கமாய்ச் சுவரோரத்தில் மேசை. அதன்மேல் பள்ளிக்கூடப் புத்தகங்கள், கொப்பிகள்.
ஆனந்து என்று அம்மா நீட்டி அழைப்பாள். அவன் படித்துக்கொண்டிருந்த ஆழ்ச்சியில் கேட்கமுடியாது போய்விடுவான். அல்லது கேட்டாலும் ‘ஓ’யென்று பதில் தர இயல்பூக்கம் அற்றிருந்திடுவான். அம்மா வாசலில் வந்துநின்றுதான் பிறகு பேசுவாள்;. கடைக்குப் போய்வர, குழையொடிக்க அல்லது அப்படி ஏதாவதொன்றுக்குக் கேட்பாள். ஆனந்து நல்லபிள்ளை. மறுப்பதில்லை.
அப்போது அந்த வளவுக்குள் நடுவேலி இருக்கவில்லை. ஆனந்தன் பார்வை திரும்பினால் பட்டுக்கொண்டிருந்தது பாக்கியம் மாமி வீடுதான். பாக்கியம் மாமிக்கு ஆனந்தன்மீது நல்ல பிரியம். அவனுக்கும் மாமிமீது நல்ல வாரப்பாடு. பின்வேலி பாக்கியம் மாமியாக்களுக்கு உரித்தானது. அறிக்கையாக அடைக்கப்பட்ட வேலிதான். ஆனாலும் அதில் ஒரு பொட்டு எப்படியோ வந்துவிடும். பொட்டு வைக்கிறது முதலில் கோழி. பிறகு ஆட்டுக் குட்டிகள். பிறகு ஆனந்தன்தான்.
பாடசாலைக்கு விடுதலையானாலோ, சனி ஞாயிறுகளிலோ பொழுதுபட்டவுடன் படிக்கச்சொல்லி வீட்டிலே பெரும்பாலும் கரைச்சல் இருப்பதில்லை. படிப்பு அந்நாட்களில் அவனது இ‘;டபூர்வமான வி‘யம். ஆனந்தன் பாக்கியம் மாமி வீட்டுக்குப் போவான். மாமி குளிக்க கிணற்றடிக்குப் போனால் லாம்புகொண்டுபோய் வைத்;;;திருப்பது அவன்தான். குளிக்கும்போது தண்ணீர் தெறித்து லாம்புச் சிமிலி உடைந்துவிடுமென்று மாமிக்குப் பயம். மாமி குளித்து முடிந்து ஈரம் துவட்டி வந்ததும் ஆனந்தனைக் கட்டிப் பிடித்து நல்லபிள்ளையென்று கொஞ்சுவாள். முலைகள் பட அவள் கொடுக்கும் அந்த அணைப்பு ஆனந்தனுக்கு வெகு சந்தோ‘மாயிருக்கும். பாக்கியம் மாமி ஐயா அளவுக்கு உயரம் பருப்பமானவள். பெரிய பெரிய முலைகள் அவளுக்கு. அந்த முலைகளில் அவனுக்குத் தனிக் கவனம் இருந்தது அந்த வயதிலேயே.
எப்படியோ அந்த இரண்டு வீட்டாருக்குமிடையில் இருந்த அன்னியோன்யம் ஒருபோதில் தெறித்துப்போனது. பொட்டும் அடைபட்டுப் போனது. ஆனந்தன் அடைந்துவந்த இனம்புரியாத இன்பமும் இல்லாது போய்விட்டது. ஆனந்தனுக்கு குடும்பப் பிளவின் காரணம் தெரியவில்லை. ஆனால் அது ஒருவரையொருவர் பார்க்க பேச பிடிக்காத அளவுக்கு வன்மமாக இருந்ததை மட்டும் அவன் அறிந்திருந்தான். அதுபோதும் அவனுக்கு. அதேயளவுக்கு அவனும் அவர்களைப் பார்க்கப் பிடிக்காமலும், பேசப் பிடிக்காமலும் இருக்கப் பழகிக்கொண்டான்.
பாக்கியம் மாமி இரவிலே அப்போதும்தான் குளிக்கிறாள். லாம்பு கிணற்றடி மறைப்பு வேலியில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆனந்தன் சின்ன அறையிலிருந்து கண்டுகொண்டிருக்கிறான் எல்லாம்.
அதற்கும் ஒருநாள் முற்றுப்புள்ளி விழுந்தது. ஐயா ஒரு சனிக்கிழமை தன்கீழ் வேலைசெய்யும் உதவிமேசன்கள், முட்டாள் வேலைசெய்வோரை அழைத்து வந்து வளவுக்குள் நடுவேலியொன்று போட்டுவிட்டார். முகமறைப்புக்கு மூன்று வரி கிடுகும் கட்டப்பட்டாயிற்று.
ஒரு மழைக்காலம் முடிந்த நாளில் தற்செயலாக நடுவேலிப் பின்புறத்தில் ஒரு பசிய முட்செடித் தாவரத்தைக் கண்டான் ஆனந்தன். கொடுவாக் கத்தி எடுத்துவந்து அதை வெட்டப்போனவனைத் தடுத்து ஐயாதான் கொண்டுவந்து முளைக்க வைத்ததாக அம்மா சொன்னாள். ஏனென்று கேட்டதற்கு, பாக்கியம் வீட்டாரின் எரிச்சல், பொறாமைகளை மட்டுமில்லை, அவர்கள் செய்துவிடக்கூடிய செய்வினைகளையும், ஏவிவிடக்கூடிய பில்லி சு+னியங்களையும்கூட அந்த சதுரக்கள்ளி மந்திர மகத்துவத்தோடு நின்று தங்களைக் காக்குமென்றாள்.
எப்படியோ மெல்லிய அச்சமொன்று ஆனந்தன் மனத்தில் விழுந்துவிட்டது. பரவசம் விளைத்த முலைகளசைய பாக்கியம் தன் பெரிய ஆகிருதியோடு தங்களைக் கெட்டுப்போக வைக்க சிவந்த கண்ணும், துடிக்கும் வாயும், விரித்த தலைமயிருமாய் வேலியில் வந்துநின்று பார்த்துக்கொண்டிருப்பதுபோல் ஒரு நினைவு ஆனந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது.
மந்திர சக்தி கொண்டதான சதுரக்கள்ளிதான் அவ்வாறு அவள் தங்களது வீட்டை நெருங்குவதைத் தடுத்துக்கொண்டிருப்பதாக அப்போது அவன் மெய்யாலுமே நம்பிக்கொண்டிருந்தான்.
சதுரக் கள்ளி பசளையிட்டு வளர்த்ததுபோல் கிசுகிசுவென வளர்ந்தது. வேலி உயரத்தில் வர ஐயா வெட்டிவெட்டி விடுவார். வெட்டப்பட்டு விழுந்த துண்டங்களும் வேர் பிடித்து முளைத்து நெடிதாக வளர்ந்தன.
ஐயா ஒருநாள் திடீரென்று செத்துப்போனார். அவர் செத்தபோது வாயிலே ரத்தக் கறை இருந்ததாம்.
அம்மாவின் சோகம் பெரிதாக இருந்தது. தன் சகல பிடிமானமும் அழிந்துபோனதாய் சொல்லிச் சொல்லி அழுதாள். அம்மா முற்றத்தில் புரண்டு புழுதி உழுதபடி அழுதரற்றியதைப் பார்த்துப் பார்த்துத்தான் ஆனந்தனுக்கும் அழுகைமேல் அழுகையாக வந்தது. சதுரக்கள்ளி தன் தந்தையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டதே என்று நினைத்தபோது அவனால் தாங்கமுடியாமல் இருந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு ஐயாவின் சிறிய தகப்பன் கதிர்காமர் செத்தவீட்டுக்கு வந்தார். கண்டிக்கு பொயிலைகட்டப் போயிருந்ததாகச் சொன்னார். என்ன நடந்தது என்று அழுத அம்மாவை தணியவைத்துக் கேட்க, அம்மா எதுவுமே தனக்குத் தெரியாதென்றாள். மாயமாய் எல்;லாம் நடந்துவிட்டதென்று சொன்னாள். கதிர்காமர் வீட்டுக்குப் பின்னால் போனார். நடுவேலியைப் பார்த்தார். பின் சதுரக்கள்ளியை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தபடி நின்றார். சிறிதுநேரத்தில் அம்மாவை அழைத்துக் காட்டினார். ‘இது அடங்கி நின்றால்தான் செய்வினைகளைத் தடுக்கும். இல்லாட்டி இதுவே ஆளைக் கொன்றுபோட்டுவிடும். எப்போதும் வீட்டு ஆளுயரத்துக்கு மேலே இதை வளரவிடக்கூடாது. சாமியைவிட இரண்டு அடி உயரத்துக்கு இது வளர்ந்திருக்கிறதைப் பார்த்தியா? இதுதான் சாமியைக் கொன்றது’ என்றார்.
எந்தவொரு சிறுதுண்டிலும் உயிர்கொள்ளும் அதன் ராட்சத வளர்ச்சியின் விசைமீதிருந்த பிரியமும், அதன் கொடுஅழகும் அன்றுதான் ஆனந்தனுக்குக் கெட்டன. பிரியம் கெட்டது மட்டுமில்லை, ஒரு வெறுப்பும் கூட வளரலாயிற்று.
அதன் பசிய நிறம் ஒருகாலத்தே அழகானதாய்த்தான் இருந்தது அவனுக்கு. அப்போது அவலட்சணமாய், வெறுப்பாய், பயங்கரமாய்…எப்படியென்று சொல்ல…இவையெல்லாம் கலந்த ஒரு கலவையுணர்வாய் வளர ஆரம்பித்துவிட்டது.
உடம்பு மிகமிக நொய்மை கொண்டது அது. தன் தசைகளை நடுவடத்திலிருந்து நான்கு திசைகளுக்கும் நீட்டிக்கொண்டிருக்கும். மஞ்சள் நிறமாயிருக்கும் அதன் முட்கள். ஒரு புள்ளியிலிருந்து இடைவெளியற்றதாய் மூன்று நான்கு முட்கள் அந்த நான்கு திசை சதைத் திரட்சிகளிலும் நீட்டிக்கொண்டிருக்கும். கற்றாழை, நாகதாளி போன்ற கள்ளி இனக் குடும்பத்தைச் சேரந்ததுதான் சதுரக் கள்ளியும். வறள் நிலத் தாவரம். எஸ்;.எஸ்.சி.க்கு தாவரவியலை ஒரு பாடமாய்ப் எடுத்தபோது இவையெல்லாம்பற்றி விரிவாகப் படித்திருக்கிறான் விவேகானந்தன். ஆனால் அதன் மந்திரத் தன்மைபற்றி எந்தப் பக்கத்திலும் ஒரு வரியேனும் இருந்திருக்கவில்லை. இருந்தும் சதுரக் கள்ளி ஒரு மாயம் நிறைந்த செடியான கற்பிதம் அவன் மனத்திலிருந்து அகலவேயில்லை.
ஜன்னல் வெளியினூடு பார்க்க பின் வளவு தெரிந்தது. நடுவேலி மரங்கள் போய்விட்டிருந்தன. மரங்களின் இடத்தில் நெருக்கமாய் அடைத்தபடி அந்த முட்செடி. இன்னும் வளவின் இரண்டு மூன்றிடங்களிலும் அந்தச் செடி ஓரலாய் நெடிய வளர்ந்திருந்தது தெரிந்தது.
விவேகானந்தன் அவசரமாய் விறாந்தையிலிருந்து இறங்கி பின்னால் சென்றான். சதுரக் கள்ளிகள் தலையுயரத்துக்கு மேல் வளர்ந்திருந்தனபோன்றே அந்த இருளினுள் நின்று பார்த்தபோது அவனுக்குத் தென்பட்டது. அதன் தலையில் வெண்ணிறப் பூபூத்திருப்பதாயும்கூட அவன் கருதினான். ‘இதை நீங்கள் தலை உயரத்துக்கு மேல் வளர விட்டிருக்கக் கூடாது’ என கதிர்காமர் அம்மாவுக்குச் சொல்வது போல ஒரு மாய ஒலி காற்றில் ஒலிக்கிறதா? விவேகானந்தன் ஒரு நிமிடம் மேற்கொண்டு அந்த இடத்தில் தாமதிக்கவில்லை. ஊர் நல்லபடி அமைதிக்குத் திரும்பட்டும், அப்ப வீடு வளவை என்ன செய்வது என்பதுபற்றி யோசிக்கலாம் என அறுதியாய் எண்ணமிட்டபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். அந்தத் தடுதாளியில் பாக்கியம் மாமி வீட்டைப் பார்க்கிற நினைவு ஒரு துண்டுக்குக்கூட அவனிடத்தில் எழவில்லை.
வானொலியிலும், தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வன்னியில் மக்கள் கொத்துக்கொத்தாய் செத்துக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்ற காலமாய் இருந்தது அது. அந்தமாதிரியான மனிதாபிமானமற்ற இனப்படுகொலையை எந்தவொரு வல்லரசு நாடாவது தடுத்துநிறுத்தக் குரல் கொடுக்காதா என எல்லோர் மனமும் நாளெல்லாம் பிரார்த்தனை செய்தது. அன்றைய கவனயீர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்ள அந்தக் கொண்டோவிலிருக்கும் சில தமிழர்கள் அவசரஅவசரமாக வெளிக்கிட்டு போய்க்கொண்டிருந்தார்கள். அவன் இன்னும் படுக்கையில் எழும்பாதபடியே.
திடீரென விவேகானந்தனுக்கு மனமெல்லாம் நிறைத்து ஒரு பிரமாண்டமான காட்சி விரிகிறது. வன்னியில் காட்டெருமைகளும், காட்டுப் பன்றிகளும், மான்களும், மரைகளும் பாம்புகளும்கூட மனிதர்களைவிட அதிகமாயிருந்த காலமொன்றிருந்தது. போக்கும் வரத்தும் கால்நடையாய் இருந்த காலமும் அதுதான். அந்தக் காலம்போல அப்போது வன்னி மாறியிருக்கிறது. நிலமெல்லாம் ஆளுயரத்துக்கும் மேலாக அதீத வளர்ச்சியடைந்த சதுரக் கள்ளிகள் முளைத்து நிற்கின்றன. இருட் பச்சையாய், நான்கு திசைகளும் தன் சதைத் திரட்சி விரித்து, அதன் உள் காத்து முனையில் தவிட்டு நிறமும் மேனியில் மஞ்சளும் கொண்ட முட்கள் நெருக்கமாய் ஒவ்வொரு புள்ளியிலும் இரண்டு மூன்றாய் நீட்டியபடி.
அப்போது, வன்னியில் அம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு தொலைக் காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது.

Friday, May 21, 2010

குட்டான்

டானியல்ஜீவா


“இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.”
நன்றி: அருண்மொழிவர்மன்
http://solvathellamunmai.blogspot.com-(இனையத்தளத்திலிருந்து)

குட்டான்
டானியல்ஜீவா
விடிகாலை 6மணிக்கு எழுந்து வேலைக்கு நான் போனால் பின்னேரம் எப்பிடியும் வீடு வர ஒன்பது மணியாகிவிடும்.சில வேளையில் பிசி இல்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள்.நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகி விட்டன.வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேல் ஓங்கும்.நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது.நான் இருக்கும் வீட்டுக்காரர் இரு வீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள்.ஸ்கபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன்.அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம்பார்த்து வாங்கியிருக்கிறார்கள்.இந்த வீட்டில் தெரிந்த தமிழ்ச் சனத்தை குடியமர்தியிருக்கிறார்கள்.அவர்களிடம் இருக்கும் இந்த இரு வீடு பற்றி கணவனும் மனைவியியும் புளுகித் தள்ளுவதில் தங்களது ஓய்வு நேரங்களைத் தொலைத்துக் கொண்டிருந்தார்கள்.நான் அவை எல்லாவற்றுக்கும் மறுப்புச் சொல்லாமல் “ம்” போடுவதை எனது போர் உத்திகளில் ஒன்றாகக் கருதினேன்.

வீட்டின் அறையில் நான் குடித்தனம் செய்ய வரமுன் இந்த அறையைப் பற்றித் தமிழ் பத்திகையில் “தளபாடத்துடன் கூடிய அறையொன்று வாடகைக்கு” என்றுதான் விளம்பரம் போடப்பட்டிருந்தது.அறையை வாடகைக்கு எடுத்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் “மரமஞ்சள்” அவிச்சு குடிக்க வேண்டிய நிலையென்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டியல்.கட்டிலின் நான்கு பக்கங்களிலிலும் கறல் கட்டிய கம்பியால் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது.சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பியின் சிறிய பகுதிகள் வெளித்தள்ளப்பட்டு காணப்படும்.இந்த கம்பியிலேயே என் கால்களில் அடிக்கடி தட்டுப்பட்டு காயக் கீறல்களு; ஏற்ப்பட்டுக் கொண்டேயிருந்தது. மெத்தையில் என் உடல் சாய்ந்தால் ஏதோ ஒரு பள்ளத்திற்குள் தொப்பென விழுவது போன்ற ஒரு உணர்விலிருந்து என்னால் தப்பவே முடியவில்லை.
ஓரு கால் முறிஞ்ச பழைய மேசை, ஒரு பழைய கதிரை, சின்ன ரீப்போ இவைகளைத்தான் கனடாவில் தளபாடத்துடன் அறை வாடகைக்கு விடப்படும் என்று விளம்பரப்படுத்துவது வழக்கமாய்ப் போய்ச்சுதோ.

நான் இங்கு வந்த போது இருந்த மன நிலை படிப்படியாக மாறி இந்த வீட்டின் சொந்தக்காரர் குமார் எனக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார்.ஒவ்வொரு வெள்ளியிரவும் குடிப்பதிலேயே குமாருக்குஅந்த இரவு அழிந்து விடும்.நான் ஒரு அறையில்,அடுத்த அறையில் இன்னொரு பொடியன்.அவனும் காலப்போக்கில் எனக்கும் குமாருக்கும் நண்பனாகி விட்டான்.அவனுடைய பெயர் விநாயக மூர்த்தி.ஆனால் நானோ குமாரோ அல்லது குமாரின் வீட்டுக்காரரோ அவனை அப்படி அழைப்பதில்லை. மாறாகா “குட்டான்” என்றுதான் நாங்கள் எல்லோரும் அவனை அழைப்பது வழக்கம்.அவன்; மிகவும் குள்ளமாக இருப்பதே அவனை அப்படி அழைப்பதற்கு மிக முக்கியமான காரணமாய் இருக்கும்.அவனை ஆரம்பத்தில் குட்டான் என்று நாங்கள் அழைத்த போது அவன் கொஞ்சம் சங்கடப்பட்டாலும் காலப்போக்கில் அவன் விரும்பியோ விரும்பமாலோ அந்தப் பெயரே நிலைத்தது.

குமாரின் இரண்டு பிள்ளைகளும் சுறுசுறுப்பான சுபாவம் கொண்ட பிள்ளைகள்.தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொள்வார்கள்.அப்படி அவர்கள் கதைப்பது குமாரின் மனைவிக்கு பெருமையாக இருக்கும்.குமாரின் மனைவி சாந்தாவை நாங்கள் சாந்தாக்கா என்றுதான் அழைப்போம்.சாந்தாவிற்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவோ எழுதவோ தெரியாவிட்டாலும் அரை, குறையாக ஆங்கிலத்தில் பிள்ளைகளோடு பேசுவதை எப்போதும் பெருமையாக நினைப்பாள்.வீட்டில் மொத்தமாக நான்கு அறைகள்.ஒர் அறையில் நானும,; மற்றைய அறையில் குட்டானும், இன்னொரு அறையில் குமாரின் அப்பாவும் அம்மாவும் மற்றைய அறையில் குமார் குடும்பமுமாய் அந்த வீடு
“கொழும்பு ஐலண்ட்” லொட்ச்சுப் போல இருக்கும்.
நான் சாப்பாட்டோடு நானூறு டொலர் மாதம் கொடுக்கிறேன். அது போல் குட்டானும் கொடுப்பான் என்றுதான் நினைக்கிறேன்.குமாரின் பெற்றோர் சமூக கொடுப்பனப் பணத்தில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் குமாருக்கு மாதம் எவ்வளவு அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி இன்றுவரையும் எனக்கு தெரியவில்லை.

குமாரின் அம்மாவுக்கு கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கலாம்.ஆனால் நவநாகரீக மங்கை போலவே தோற்றம்.இரண்டு கைகளிலும் தங்க வளையல் அடுக்கப்பட்டிருக்கும்.மோதிரங்கள் மூன்று எப்போதும் விரல்களில் அலங்கரித்திருக்கும்.கண்களில் அஞ்சனம் அழகாய் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் பூசுவதை மட்டும் மறப்பதில்லை. உதட்டில் சாயம் எப்போதும் உட்காந்திருக்கும்.உடையில் மேலேத்தேய நாகரீகம் தூக்கலாய் இருக்கும.;அடிக்கடி கண்ணாடி முன் நின்று சரிபார்க்கும் குமாரின் அம்மாவிற்கு நிறம் மட்டும் கறுப்பாக இருப்பதாக கவலை.ஆனாலும் வெளிப் பார்வைக்கு அவள் தன்னுடைய குறையாக அந்த நிறப் பிரச்சனையை என்றும் காட்டிக் கொள்வதில்லை.

இன்று வெள்ளிக்கிழமை நாள். வழமையான நாட்களிருந்து எங்களுக்கு இந்தநாள் வேறுபட்டே இருக்கும்.ஏனென்றால் இன்றுதான் வீட்டிலிருக்கும் எல்லோரும் ஒன்றாய் சந்திக்கும் நாள்.குமாரின் பெற்றோர்கள் நடுவிறந்தையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் இருக்கும் “இத்தாலியன் லெதர் சோபா”வில் உட்கார்ந்து விட்டார்கள்.குமார் வேலை முடிந்து வருவதற்கு இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கின்றது.குட்டான் வேலை முடிந்து வந்து குளித்து விட்டு அவனுடைய அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான்.சாந்தா நல்ல வாசம் மூக்கைத் துளைக்கிற மாதிரி கறி சமைத்துக் கொண்டு குசினிக்குள் நின்றாள்.பொதுவாக நான் சாப்பிடுவதற்காக நடு விறாந்;;தைக்கு வரும் போது சாந்தா சோபாவில் இpருந்தால் குமாரின் பெற்றோர்கள் சாந்தாவுக்கு முன்னால் வந்து உட்க்கார மாட்டார்கள்.

நான் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டில் சாந்தாவைத் தவிர வேறு யாரும் வீட்டில் இருக்கவில்லை.அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாந்தா தன் நெஞ்சுக்குள் அடுக்கடுக்காய் சேமித்து வைத்த பிரச்சினைகளை வாய் விட்டுத் கொட்டித் தீர்த்தாள்.சாந்த எனக்குத் தன்னுடைய மாமா மாமி பற்றிச் சொன்ன குற்றச் சாட்டுக் கெல்லாம் “ம்” போட்டபடியே இருந்தேன்.சில பிரச்சினைகள் பற்றி கதைக்கும் போது குறுக்காக சாந்தாவிற்கு நோகாமல்; சில கேள்விகளையும் தொடுத்தேன்.பொதுவாக சாந்தாவின் உப்புச்; சப்பில்லாத நொண்டிச் சாட்டுகளில் எனக்கு உடன்பாடில்லை.நேற்று கேட்ட சில கேள்விகளுக்கு சாந்தா சொன்ன பதில்கள் வேடிக்கையோடு என் மனதில் இழையோடியது.

“அக்கா.. இங்கை மூதியோரை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவங்க அவர்கள் வந்த பின் பொதுவாக கொடுமைப்படுத்துறங்க என்டுதான் பரவலாய் கதையிருக்கு. ஆனா நீங்க சொல்றதப் பார்த்தா உங்கட மாமி மாமாதான் உங்களை கொடுமைப் படுத்துவது போல இருக்கே..?என்று கேட்டதற்கு,
‘ம்’ பேந்தென்ன தம்பி..நீ இன்னம் கல்யாணம் பண்ணேலெயெண்ட அது உன்ர சொந்தப் பிரச்சினை அதேயேன் உன்னட்ட தோண்டித் தோண்டித் கிளறவேணும் இதிலயிருந்து அவங்கட குணத்தை நாங்க அறியேலாதா..?

சில வேள அவங்களுக்கு என்னுடைய வாழ்க்கையில அக்கறையிருக்கலாம்தானே...?
அவையளுக்கு உங்கட வாழ்க்கையில அக்கறையா..?இது மெய்யாத்தான் இருக்குமோ.. அது அவியட நடிப்பு..தன்ர சொந்தப் பிள்ளை படுகிற கஸ்டத்தையே உணராமல் இருக்குவினம்.அதுக்குள்ள உங்கட வாழ்க்கை பிரச்சினையிலையா அக்கறை வந்திருக்கும்.அவங்க சுபாப் புத்தியே மற்றவங்கட பிரச்சினையை தோண்டித் தோண்டித் கேட்கிறதுதான்... என்னைப் பாருங்களேன்.வேலை முடிஞ்சு வந்துசும்மா சோபாவில இருந்தால் குசினிக்குள் ஏதோ செய்யிற மாதிரி நிண்டு கொண்டு குத்தலாய் கதைப்பாள்…எத்தினை நாளைக்கெண்டுதான் நானும் பொறுத்துக் கொள்ள…அதென்ன தம்பி இந்த வயசிலேயேஅவியள் பட்டப் பகலியே அறையை பூட்டிக் கொண்டு புதுசாக கல்யாணம் செய்தவியள் மாதிரி ஆட்டம் போடுகினம் பேரப்பிள்ளையை கண்ட காலத்திலேயே இப்படியெண்டால் அந்தக் காலத்திலே எப்படி சோக்குப் பண்ணியிருப்பினம்?இதுக்குமேலே இரண்டு பேரும் குடியும் கும்மாளமும்...ச்சீ... எங்கட பரம்பரையிலேயே பொம்பிளைகள் குடிச்சதாய் இதுவரைக்கும் வரலாறு கிடையாது. இவையளுக்கு வெக்கம் மானம் ரோசம் கிடையாது.என்ர மனுசனையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குடிக்கினம்.இதன்ன அறுந்த குடும்பம்.தெரியாமல் வந்து விழுந்திட்டேன்.

ஒரு அடைமழை பெய்து ஒய்வெடுத்தது போல அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தெறித்து அமைதியானள்.ஏன் அமைதியானல் என்பது எனக்கு புரியவில்லை.என்னைக் கதைக் விடமால் தானே வெடு வெடுத்துக் கதைத்துக் கொண்டிருந்தவள் ஏன் திடிரென உறை நிலையானள்.?ஒற்றைப் பின்னல் கூந்தல் மார்ப்பிக்கிடையில் நெளிந்து அழகுகிறிக்கிடந்தது.நெற்றியல் சிவப்பு நிலா..இரண்டு காதோரமும் முடி நீண்டு சுடுண்டு மடிந்து கிடந்தது.அது விரல்களால் சுருட்டி விடப்பட்டிருக்க வேண்டும். இப்படி சுருட்டி விடுகிற பழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம்.களுத்தில் தங்கத் தாலி அதன் மேல் முத்தமிட்டபடி மல்லிகை மொட்டு சங்கிலி கிடந்தது.மௌனம் போர்த்திக் கிடந்த முகத்தை எறிட்டு பார்த்தேன்.விக்கித்துப் போனேன்.கண்கள் சிவத்து மெல்ல மெல்ல கண்ணீர்; சிறு ஒடையாய் ஒடியது.

ஏன் சாந்த அக்கா அழுகிறியேள்..?
‘……..’
ஒன்னும் பதில் சொல்லாமலே இன்னும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
நான் மீண்டும் கெஞ்சும் குரலில்
“என்னண்டு சொல்லிப் போட்டுத்தான் அழுங்கலன் அக்கா......?”என்றேன்.
அவள் எதுவும் பேசுவதாக தெரியவில்லை.நான் இதற்கு மேல் கதைக்காமல் என்னுடைய அறைக்கு போய் விட்டேன். கணணிக்கு முன்னால் நான் இருந்து இலங்கைச் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் நேற்று நடந்த இந்த நினைவும் வந்து தொலைந்தது

அறைக்குள் இருந்து நான் விறாந்தைக்கு வரவும் குட்டானும் வெளி விறாந்தைக்கு வரவும் சரியாக இருந்தது. நான் குட்டானை பார்த்துக் கொண்டு,
“என்னடா குட்டான் முகமெல்லாம் அதைச்சுப் போய்க்கிடக்கு…ஏன்ரா இரவெல்லாம் முழிச்சிருந்து தமிழ் நாடகங்கள் பார்த்தனீயோ..?”
“இல்லையடா மச்சான் இரவில இப்ப நெத்திரை வாறது குறைவாயிருக்கு..இப்ப புதுசா சேர்ந்த இரண்டாவது வேலை சரியான கஸ்டமட அதுதான் இரவில கொஞ்சம் நெத்திரை வரப்பஞ்சிப்படும்.அதாலாதான் மூஞ்சி அதைச்சுப் போய்க்கிடக்குது..என்ன செய்யிறது இங்க உழைக்கத்தனே வந்தனாங்க.உடம்பு ஏலும் மட்டும் அடிப்போம்…எங்கட கஸ்டத்தை மற்றவங்களுக்கு சொன்னாப் போல தரவா போறாங்க.”என்று சொல்லிக் கொண்டு பக்கத்தில் இருந்த சோபவில் உட்காந்தான்.
நான் சோபாவிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்க குமாரின் அம்மா என்னைப் பார்த்து@
“கொஞ்சம் இரன்தம்பி சோபவில்”என்று சொல்லவும் நான் சோபவில் உட்காந்து கொண்டேன்.
இஞ்ச பார்த்தீயளா குட்டான்ர கதையை நாங்க என்ன கேட்ட உதவி செய்ய மாட்டோமா?”
அவளுடைய இயல்பான கேளியும் கின்டலும் கலந்த குரலில் மனமுருகி கேட்பது போல் குமாரின் அம்மா கேட்டாள்.குட்டானுக்கு கோபம் வந்ததோ என்னவோ ஒரு குத்தலாக கதையைப் போட்டான். “நீங்களே பிச்சை எடுத்துக் கொண்டுருக்கிறீயள் அதுக்குள்ள எனக்கு உதவி செய்யப் போவினயம்.கொஞ்சம் உள்ளுக்குள்ள போனவுடனே என்ன கதைக்கிறதென்டு தெரியாமல் வாயில் வந்ததெல்லாத்தையும் கொட்டுறியள்.”என்றான்.குமாரின் அம்மாவுக்கு முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது வலியும் அவமானமும் கொதிப்புமாய் உயர்ந்தது உடலில்..கோபக் குவியாலாய் முகம் இறுகி கனத்து செவ்வானம் போல் சிவந்திருந்தது .டெய் பொன்னையான்! நாங்க வெல்வாயர் எடுத்து சீவித்தால் உனக்கு என்னடா செய்யுது.நாலு சல்லிக்கு பெறாத நாய் எங்களைப் பார்த்து கதைக்கிறியோ..?எங்கட குடுபத்தின்ர கௌரவம் என்ன..எங்கட ஊருலயே எங்கட்டத்தான் மெத்தை வீடு இருக்குது…வீட்டில் ஒன்னுக்கு இரண்டு வேலைகாரர் நீயெல்லாம் எங்கட கால் தூசிக்கு வரமாட்டாய் அதுக்குள்ள வாயைப் பார்…?”
குட்டானும் விடமால்,
“பேந்தென்ன குடும்ப கௌரவத்தை சொல்ல வேண்டும் பொஞ்சாதியும் புருசனும் புள்ளையும் சேர்ந்து குடிக்கிற இலட்சணத்தில”
அது எங்கட நாகரீகம்…எங்கட விருப்பம் அதுல உனக்கு என்ன செய்யுது…?”


அப்ப உன்னைப் போல பொன்னையன் மாதிரி முலைக்குள் கிடக்கவ சொல்லிறியல் விடிஞ்சா பொழுது பட்டால் வேலை வேலையெண்டு திரியிற நாய்…குடிக்கத் தெரியாது சிகரட் பத்தத் தெரியாது நாலு இடத்திக்கு போகத்தெரியாது நாலு பேரோட பழகத் தெரியாது நீயெல்லாம் ஆம்புளையா..?பொன்னையன்…பொன்னையன்…”
ஆண்மை பற்றி அவள் கொண்டிருந்த கோட்ப்பாடு கோபத்தோடு வெளிப்பட்டது.
மாயனா அமைதி விறாந்தையில் நிலவியது.

குசினிக்குள் நின்று நடக்கிற விடயங்களை அவதானித்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்த சாந்த கையில் இரண்டு கப்பு தேத்தண்ணீயைக் கொண்டு வந்து எனக்கும் குட்டானுக்கும் தந்துவிட்டு மீண்டும் குசினிப்பக்கம் போய்விட்டாள். இவ்வளவு நேரமும் குசினிக்குள் நின்ற சாந்த திடீரென ஏன் விறாந்தைக்கு வரவேனும்...? ஏதேனும் காரணத்திற்காகத்தான் அவள் தேத்தண்ணீயை தருவது போல் விறாந்தைக்கு வந்து போயிருக்க வேண்டுமென்று என் மனதிற்குள் மின்னலாய் வெட்டியது.ஆனால் சாந்த விறாந்தைக்கு வரும் போது அவளுடைய முகத்தில் கடுப்பான எரிச்சல் கவிந்து கிடந்ததை அவதானித்தேன்.
அவள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் குடும்பச் சுமை தின்று தீர்க்க@ மூச்சு விட நேரமற்று ஓடித்திரிவாள்.அன்பான கணவனும்@ அம்மா..அம்மா..என்று அன்பால் நனைக்கும் பிள்ளைகளும் அவள் இதயத்தை இதமாக வைத்திருந்தாலும் வீட்டில் இருப்பவர்களால் அவ்வப்போது ஏற்ப்படும் பிரச்சினைகளால் தூக்கம் இன்றி துக்கத்தில் ஆழ்ந்து போய்விடுவாள்.அப்படி எற்ப்படும் துயரத்தில் இருந்து உடனடியாக அவள் மீழவும் மாட்டாள்.சில வேளை ஒரு மாதத்துக் கூட நீண்டு போய் விடும்.அந்த நேரத்தில் யாருடனும் முகம் விட்டு பேசாமல் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் பூட்டி மனதிற்குள் மறைத்து வைத்து கடுப்பான எரிச்சலோடு உருகிச் செத்துக் கொண்டிருப்பாள்.அவளுடைய இயல்பே அப்படித்தான் என்பதை உணர்ந்த குமார் அதற்கேற்ப்ப வளைந்து கொடுப்பான்.

சுவரில் மாட்டப்பட்ட மணிக்கூடு ஒரு பறைவையின் சத்தம் போல் ஒலியெழுப்பி இரவு எழுமணியைக் காட்டிக் கொண்டு ஓய்ந்தது இளவேனிற் காலம் என்பதால் எழுமணியாகியும் இன்னும் இருட்டவில்லை.சூரியனின் மஞ்சள் நிற ஒளிக்கதிர்கள் வீட்டின் முன்பக்கத்திலுள்ள கண்ணாடியில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்தன.குமார் வழமையாக ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்து சேருவான்.ஆனால் இன்று ஏழுமாணியாகியும் இன்னும் வரவில்லை.இன்று வெள்ளியரவு என்பதால் சில வேளை குடிவகை வாங்கப் போயிருக்கலாம். விறாந்தையில் நிலவி;க்கொண்டிருந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று மனம் கிளற,
“குட்டான் நடந்ததெல்லாம் மறந்து போட்டு வா சாப்பிடுவோம் என்று கூப்பிட்டுக் கொண்டு குமாரின் அம்மாவின் மீது என் பார்வை திரும்பியது.
“அம்மா என்னதான் இருந்தாலும் குட்டான் உங்களுடைய வயதுக்காவது மதிப்புக் குடுத்து கதைச்சிருக்க வேணும் அவன் அப்படி கதைக்காதது அவனுடைய பிழைதான் நான் ஒத்துக் கொள்கிறன்.அது போல நீங்களும் கொஞ்சம் நாகரீகமாக அவனோட கதைத்திருக்கலாம்.”நான் சொல்லி முடிப்பதற்குள்
ஏரிகின்ற நெருப்பில் எண்ணைய் ஊற்றியது போல் என் வார்த்தை இன்னும் அவள் கோபத்தை கிளறி விட்டுது போல..,
“இந்தக் குட்டானோட நாகரீகமாய் கதைக்கிறதா..?இப்பவே பெட்டியைக் கட்டிக் கொண்டு வீட்டை விடடுப்போகணும்..இல்லையெண்டால் நடக்கிறது வேற..”
குட்டான் ஒன்னும் பேசாமல் பறையாமல் இருக்க…குசினிக்குள் நின்ற வசந்தா டக்கென வெளிவிறந்தைக் விறு விறு என நடந்து வந்தாள்.முகத்தில் உணர்ச்சிக் குவியல் குமாரின் அம்மா சொன்ன வார்த்தையை உள்வாங்கி கடுப்பாகிப் போனாள்.மனம் இருப்புக் கொள்ள முடியாமல் கொந்தளித்தது. சூரியனையே சுட்டுப் பொசுக்கும் விழிகளின் பார்வை..நான் இந்த வீட்டின் அறைக்கு வந்த நாட்களிலிருந்து இப்படி வசந்த கோபம் கொண்டதை இது வரையில் நான் பாhத்ததே இல்லை.
“குட்டான்!எங்கட வீட்டிலே வாடகைக்கு இருக்கிறவன்..அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்ல மாமி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அவங்க தாற வாடகையில்தான் வீடடுக்கு வாங்கிய கடன் கட்டுறம் அவங்க வீட்டை விட்டு போனால் எனக்குத்தான் அந்த கஸ்டம் தெரியும்.அவன் தானொன்டு தன்ர வேலையென்டு தன்ர பாட்டில இருக்கிற பொடியனை..”என்று நீட்டி முழங்கிக் கொண்டிருந்த வார்த்தைகள் முற்றுப் பெறுவதற்குள் குமாரின் அம்மா முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்தாள்.
“நீயேன்ரி அவனுக்காக வாக்காளத்து வாங்கிக் கொண்டு வாற..ஆட்டக்காறி..வாயைத்திறந்திட்டாள்.எனி வாய் குடுத்து தப்பயேலாது.”
“எனக்கு மற்ற ஆட்களைப் பற்றி கவலையில்லை..குட்டான் எங்களோடுதான் இருப்பான்.”
குமாரின் அம்மாவுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது
“அப்ப…இவள் அவனை வைச்சிருக்கிறாளாக்கும்”
அதன் பின் யாரும் எதுவும் கதைக்கவில்லை.விறாந்தை முழுவதும் அமைதி அப்பிக்கிடந்தது.
யன்னல் வெளியினுடே வானம் இருன்டு கொண்டு வந்தது.வெளிப்பக்கமாக கார் வந்து தரித்து நிற்க குமார் இறங்கி உள்ளே நடந்து வந்தான்.
(முற்றும்)
நன்றி:காலம்

Monday, May 17, 2010

கல்லறையிலிருந்து ஒரு குரல்

டானியல்ஜீவா
நான் சேர வேண்டிய
இடத்திற்கு வந்து விட்டேன்.
நீ தான் இன்னும்
வரவில்லை

நீ என்னிடம்
இல்லை யென்பதை
ஏற்றுக் கொள்ள
என் மனசு மறுக்கிறது.

நள்ளிரவுக் கதவை
மூர்க்கமாய்த் தட்டும்
காமம்…
திரும்பிப் பார்த்தால்
நீயிருக்கவில்லை.

சிறகு முளைத்த கணமே
பயணித்தேன்;
நான் வீழ்ந்த கதை
உனக்கு
தெரியாமலே
போய் விட்டது.

தீயின் கீழிருந்த
என் வீட்டிலிருந்து
புறப்பட்டேன்
பனிமுடிய நதியைக் கடந்து

தனிமையில்
தனித்திருந்தேன்
முடியாமலிருந்தது.
உன்னோடு இருந்தேன்
இறப்பின் ரகசியம்
என்னோடு இருந்தது

உன்னால்
என் உயிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருந்தது
அப்போதும்
நீ வருவதாக இருந்தது
ஆயினும் வரவில்லை

மனசுடைந்து நதியில்
வீழ்ந்தேன்.
மரித்தோரிடமிருந்து
உயிர்த்தெழ மாட்டேன்
ஏனென்றால்
நான் மரித்து விட்டேன்.
நன்றி:கூர்2010

கல்லறையிலிருந்து ஒரு குரல்

டானியல்ஜீவா
நான் சேர வேண்டிய
இடத்திற்கு வந்து விட்டேன்.
நீ தான் இன்னும்
வரவில்லை

நீ என்னிடம்
இல்லை யென்பதை
ஏற்றுக் கொள்ள
என் மனசு மறுக்கிறது.

நள்ளிரவுக் கதவை
மூர்க்கமாய்த் தட்டும்
காமம்…
திரும்பிப் பார்த்தால்
நீயிருக்கவில்லை.

சிறகு முளைத்த கணமே
பயணித்தேன்;
நான் வீழ்ந்த கதை
உனக்கு
தெரியாமலே
போய் விட்டது.

தீயின் கீழிருந்த
என் வீட்டிலிருந்து
புறப்பட்டேன்
பனிமுடிய நதியைக் கடந்து

தனிமையில்
தனித்திருந்தேன்
முடியாமலிருந்தது.
உன்னோடு இருந்தேன்
இறப்பின் ரகசியம்
என்னோடு இருந்தது

உன்னால்
என் உயிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருந்தது
அப்போதும்
நீ வருவதாக இருந்தது
ஆயினும் வரவில்லை

மனசுடைந்து நதியில்
வீழ்ந்தேன்.
மரித்தோரிடமிருந்து
உயிர்த்தெழ மாட்டேன்
ஏனென்றால்
நான் மரித்து விட்டேன்.
நன்றி:கூர்2010